×

கோவளம் கடற்கரையில் தொலைத்த 8.5 சவரன் நகையை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

திருப்போரூர்: கோவளம் கடற்கரையில் தொலைத்த 8.5 சவரன் நகையை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரை போலீசார் பாராட்டினர். கிழக்கு கடற்கரை சாலையில் கோவளத்தில் நீலக்கொடி கடற்கரை உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் மேலாளராக ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ் (42) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது கார் பார்க்கிங் பகுதியில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய எட்டரை சவரன் தாலி சரடு கிடப்பதை பார்த்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சுதாகரன் என்பவரிடம் தெரிவித்து அவருடன் சென்று கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் சென்னை கீழ்க்கட்டளையை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மனைவி அந்த தாலி சரடை தொலைத்து விட்டதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஈஸ்வரமூர்த்தியின் தொலைந்த நகையைத்தான் வெங்கடேஷ் ஒப்படைத்தார் என்பது உறுதியானது. இதையடுத்து கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு) அழகம்மாள் நகையை அதன் உரிமையாளரான ஈஸ்வரமூர்த்தியிடம் ஒப்படைத்தார். மேலும், நகையை எடுத்துக் கொடுத்த நீலக்கொடி கடற்கரை மேலாளர் வெங்கடேஷ் என்பவரை அனைவரும் பாராட்டினர்.

The post கோவளம் கடற்கரையில் தொலைத்த 8.5 சவரன் நகையை கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kovalam beach ,Kelambakkam police station ,Tirupporur ,Neelakodi Beach ,Kovalam ,East Coast Road ,Eenchambakkam ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை